உள்ளூர் செய்திகள்
நைனார் மண்டபத்தில் தொழிலாளி தூக்கு போட்டு இறந்து போனார்.
புதுச்சேர்:
புதுவை நைனார் மண்டபம் மூகாம்பிகை நகர் 9-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 52) கார் டிங்கரிங் வேலை செய்து வந்தார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும் பிரேம்குமார் என்ற மகன் மற்றும் திவ்யா என்ற மகள் உள்ளனர். திவ்யாவுக்கு திருமணமாகி கணவருடன் தனது பெற்றோர் வீட்டிலேயே வசித்து வருகிறார். பிரேம் குமார் பெங்களூரில் வேலை செய்து வருகிறார்.
இதற்கிடையே ரவிக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்தது. இதற்காக அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவார். அதன் பின்னர் நோய் குணமடைந்ததும் மீண்டும் அதே நிலைமை ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று காலை ரவி வழக்கம் போல் வேலைக்கு செல்வதாக மனைவியிடம் கூறிசென்றார். பின்னர் மதியம் 12 மணியளவில் ரவி திடீரென வீடு திரும்பினார். அவரிடம் அவரது மனைவி ஜெயந்தி விசாரித்த போது உடல் நிலை சரியில்லாததால் வீட்டுக்கு வந்துவிட்டதாக ரவி தெரிவித்தார்.
இதையடுத்து ஜெயந்தி பால் வாங்க கடைக்கு சென்றார். பின்னர் பால் வாங்கிக் கொண்டு வீடு திரும்பிய போது வீட்டில் கணவரை காணாமல் ஜெயந்தி அதிர்ச்சி அடைந்தார்.
கணவரின் செருப்பு மட்டும் வீட்டின் வெளியே இருந்ததால் சந்தேகம் அடைந்து ஜெயந்தி வீட்டின் மாடிக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு திடுக்கிட்ட ஜெயந்தி அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் உதவியுடன் ரவியை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ரவி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மனைவி ஜெயந்தி கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.