உள்ளூர் செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ரங்கசாமி தொடங்கி வைத்தார்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ந் தேதி நாடு முழுவதும் தொடங்கப் பட்டது.
புதுச்சேரி:
புதுவையிலும் தடுப்பூசி போடும் பணி தொடங்கி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டது.
முதலில் முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. அதன் பிறகு பொது மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டினர்.
இதற்காக சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்கப் பட்டு தடுப்பூசி போடும் பணி முழு அளவில் மேற்கொள் ளப்பட்டது.
இதனைத்தொடர்ந்து 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.
இந்த நிலையில் நாடு முழுவதும் 16-ந் தேதி முதல் 12 முதல் 14 வயது வரையிலான பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.
புதுவையில் கதிர்காமம் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்க விழா நடந்தது. முதல்-அமைச்சர் ரங்கசாமி தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைத்தார்.
கே.எஸ்.பி. ரமேஷ் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு, பள்ளி முதல்வர் சிவகாமி, துணை முதல்வர் கோகிலாம்பாள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.
கார்பிவேக்ஸ் என்ற தடுப்பூசி 7, 8, 9-ம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு செலுத்தப்பட்டது.
புதுவை மாநிலத்துக்கு 54 ஆயிரம் டோஸ் கார்பி வேக்ஸ் தடுப்பூசிகள் வந்துள்ளன. அரசு, தனியார், அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு இந்த தடுப்பூசி போடப் படுகிறது. அந்தந்த பள்ளி வளாகத்திலேயே சுகாதாரத்துறை ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தினர்.
இதுகுறித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறும் போது, ஏற்கனவே 90 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இப்போது 12 முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி உள்ளது என்றார்.