உள்ளூர் செய்திகள்
சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.
சீர்காழி:
சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது.
இக்கோவிலில் தனி சன்னதியில் நவக்கிர கங்களில் செவ்வாய் பகவானுக்கு அதிபதியான அங்காரகன், செல்வ முத்துக்குமாரசாமி, தன்வந்திரி ஆகிய சுவாமிகள் அருள் பாலிக்கின்றனர்.
பிரசித்தி பெற்ற இக்கோவிலில் பங்குனி உத்திர உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
உற்சவத்தின் முக்கிய விழாவாக திருத்தேரோட்டம் நடைபெற்றது. கோவில் கட்டளை விசாரணை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். முன்னதாக விநாயகர், செல்வ முத்துக்குமாரசாமி, சுவாமி அம்மன் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் பஞ்ச மூர்த்தி சுவாமிகள் எழுந்தினர்.
முதலாவதாக புதிதாக செய்யப்பட்ட தேரில் எழுந்தருளி நான்கு வீதிகளில் தேரோட்டம் நடந்தது.
அதன் பின்னர் செல்வ முத்துக்குமார சுவாமி எழுந்தருளி பெரிய தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடிக்க நடைபெற்றது பின்னர் சுவாமி அம்மன், அங்காரகன், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமி தேரோட்டம் நடைபெற்றது.
தேரோட்ட விழாவில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.எஸ்.பி லாமெக் தலைமையில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் சப்&இன்ஸ்பெக்டர் காயத்ரி மற்றும் வைத்தீஸ்வரன்கோவில் போலீசார் செய்திருந்தனர்.