உள்ளூர் செய்திகள்
நட்சத்திர அந்தஸ்துடன் கூடிய ஓட்டலை முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் பார்வையிட்டனர்.

கடல் அழகை ரசிக்க அரசு சார்பில் புதிய சொகுசு ஓட்டல்

Published On 2022-03-15 14:10 IST   |   Update On 2022-03-15 14:10:00 IST
கடற்கரை சாலையில் கடல் அழகை ரசிக்கும் வகையில் அரசின் புதிய சொகுசு ஓட்டலை ரங்கசாமி பார்வையிட்டார்
புதுச்சேரி:

புதுவை கடற்கரை சாலையின் இறுதியில் அரசின் சாராய வடி ஆலை இயங்கி வந்தது.

இந்த ஆலை வில்லியனூருக்கு  இடமாற்றம் செய்யப்பட்டதால் கால் நூற்றாண்டாக இயங்காமல் வந்தது. இந்த இடம் பயன் படுத்தப்படாமல் பாழடைந்து சுவர்கள் இடிந்து விழுந்தது. இதையடுத்து அரசு சார்பில் சுற்றுலா மேம்பாட்டில் அப் பகுதியை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. 

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அந்த இடத்தில் நட்சத்திர அந்தஸ்துடன் கடல் அழகை ரசிக்கும் வகை யில் ஓட்டல் கட்ட முடிவு செய்யப்பட்டது. 

இதற்கான பணிகள் ரூ.13 கோடி செலவில் தொடங்கி நடந்து வந்தது. இப்போது பணிகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. 3 ஏக்கர் பரப் பளவு கொண்ட இடத்தில் 3 ஆயிரம் சதுரமீட்டரில் கீழ்தளம், 2 ஆயிரத்து 500 சதுரமீட்டரிலும், அதற்கு மேல் சிறிய பகுதி என 6 ஆயிரம் சதுரமீட்டரில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 

கீழ்தளத்தில் விழாக்கள் நடத்தும் வகையில் பெரிய அரங்கம் அமைக்கப் பட்டுள்ளது.
மேல் தளத்தில் 14 அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து அறைகளும் கடல் அழகை பார்க்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது. தரைதளத்தில் திறந்தவெளி திரையரங்கு அமைக்கப் பட்டுள்ளது. மேல் தளத்தில் அறையில் தங்குபவர்கள் கடல் அழகை அருகே சென்று பார்க்கும் வகையிலும் கட்டு மானப்பணி நடந்துள்ளது. 

தற்போது கட்டடத்துக்கு வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் பார்வையிட்டனர். 

பொதுப் பணித்துறை நிர்வாக பொறியாளர் ஏழுமலை கட்டிட அமைப்பு குறித்து விளக்கினார். முதல்-அமைச்சர், அமைச்சர் அனைத்து பகுதிக்கும் சென்று பார்வையிட்டனர்.  பின்னர் முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த கட்டடப்பணி 2 மாதத்தில் முழுமையடையும். அரசே கட்டிடத்தை பரா மரிக்கலாமா? தனியாரிடம் வழங்கலாமா? என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் அழகிய கட்டிடமாக வடிவமைக்கப் பட்டுள்ளது. இதை மேலும் அழகுபடுத்தும் பணி நடக்க உள்ளது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும். இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம் உக்ரைனில் இருந்த புதுவை மாணவர்கள் அனைவரும் திரும்பிவிட்டார்களா? என கேட்டபோது, அனைத்து மாணவர்களும் திரும்பிவிட்டனர் என்றார்.

Similar News