உள்ளூர் செய்திகள்
மின்சாரம் தாக்கி மனைவி, 2 வயது குழந்தையுடன் கொத்தனார் பலி
சீர்காழி அருகே மின்சாரம் தாக்கி மனைவி, 2 வயது குழந்தையுடன் கொத்தனார் பலியாகியுள்ளனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வேட்டங்குடி கேவரோடை கிராமத்தை சேர்ந்தவர் நிவாஸ்ரத்தினம் (வயது 34) கொத்தனார். இவர் நேற்று மாலை தனது மாடி வீட்டில் சுவிட்ச் போர்டில் பழுதடைந்த சுவிட்சை சரி செய்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக நிவாஸ்ரத்தினத்தை மின்சாரம் தாக்கி துடித்தார். அதனைக் கண்ட அவரது மனைவி ஹேமா (28) இடுப்பில் தனது ஓன்றரை வயது மகள் நிஹன்யாவை தூக்கிக்கொண்டு கணவரை காப்பாற்ற முயன்றுள்ளார்.
அப்போது அவர்களையும் மின்சாரம் தாக்கி உள்ளது. இதில் மூவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமெக், இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த கணவன், மனைவி, மற்றும் குழந்தையின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சீர்காழி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்ததுடன் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.