உள்ளூர் செய்திகள்
தற்கொலை

சேலம் கொண்டலாம்பட்டியில் 2 மகள்களுடன் வி‌ஷம் குடித்த தாய்- 9 வயது சிறுமி பலி

Published On 2022-03-14 17:56 IST   |   Update On 2022-03-14 17:56:00 IST
சேலம் கொண்டலாம்பட்டியில் 2 குழந்தைகளுக்கும் வி‌ஷம் கொடுத்து விட்டு தானும் குடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:

சேலம் கொண்டலாம்பட்டி ஏரிக்காடு பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன்.

வாய் பேச முடியாத இவர் வெள்ளிபட்டறையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரேவதி (வயது 29). இவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஜனனிஸ்ரீ (13), வேதிகாஸ்ரீ (9) என்ற 2 மகள்கள் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்றிரவு ரேவதி குருணை மருந்தை கலக்கி தனது மகள்களுக்கு கொடுத்து விட்டு தானும் குடித்து விட்டார். பின்னர் வீட்டில் மயங்கிய நிலையில் 3 பேரும் கிடந்தனர்.

இதனை அறிந்த அந்த பகுதியினர் கொண்டலாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து வந்த போலீசார் உயிருக்கு போராடிய படி கிடந்த 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது வேதிகாஸ்ரீ இறந்து விட்டதாக தெரிவித்தனர். ரேவதி மற்றும் ஜனனிஸ்ரீ ஆகிய 2 பேரையும் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் 2 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனை அறிந்த உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரியில் திரண்டுள்ளனர். அதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. வேதிகாஸ்ரீ உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. ரேவதி எதற்காக குழந்தைகளுக்கும் வி‌ஷம் கொடுத்து விட்டு தானும் குடித்தார் என்ற விவரம் தெரிய வில்லை.

இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

Similar News