உள்ளூர் செய்திகள்
தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் - அ.தி.மு.க. ஊராட்சித்தலைவர் இடையே மோதல்
சீர்காழி அருகே தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் - அ.தி.மு.க. ஊராட்சித்தலைவர் இடையே மோதலில் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் தெற்கு தெருவை சேர்நதவர் தெட்சிணாமூர்த்தி (60). அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் சட்டநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இதேபோல் சட்டநாதபுரம் ஆதித்யா நகரை சேர்ந்தவர் எஸ்.எஸ்.ஜெ.விசாகர் (42) தி.மு.க ஒன்றியக்குழு உறுப்பினராக உள்ளார்.
இதனிடையே சட்டநாதபுரம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடந்துவருகிறது. அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு பிளாட் சுற்றுசுவர் சேதப்படுத்தப்பட்டதாக தெரிகிறது. இது குறித்து விசாகர் மற்றும் தெட்சிணாமூர்த்தியிடையே வாக்குவாதம் ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.
கடந்த 9ம் தேதி ஒன்றியகுழு கூட்டத்தில் தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் விசாகர் சட்டநாதபுரம் ஊராட்சியில் எவ்விதமான வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை என தெரிவித்தார். பின்னர் கூட்டம் முடிந்து வெளியில் வந்த விசாகரிடம், அங்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் தெட்சிணாமூர்த்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருவரிடையே தகராறு நடந்தது. அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்தி அனுப்பினர்.
புகார் தெரிவிக்கப்பட்ட சட்டநாதபுரம் ஊராட்சி கலியபெருமாள் நகரில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி, பொறியாளர் சிவகுமார் ஆய்வு செய்துள்ளனர். அப்போது மனையை சேதப்படுத்தி சாலை அமைக்கப்படுவதாக விசாகர், அதிகாரிகளிடம் கூறினாராம். அங்கிருந்த ஊராட்சி தலைவர் தெட்சிணாமூர்த்தி இதற்கு மறுப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம் முற்றி இருவரும் தாக்கி கொண்டதாக தெரிகிறது.
இதில் காயமடைந்த ஊராட்சி தலைவர் தெட்சிணாமூர்த்தி சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல் ஒன்றிய கவுன்சிலர் விசாகரும் தாக்குதலில் காயமடைந்து சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இருவரும் அளித்த புகாரின் பேரில் சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் விசாகர், தெட்சிணாமூர்த்தி இருவர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் தெட்சிணாமூர்த்தியை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ், மாவட்ட அவைத்தலைவர் பி.வி.பாரதி, ஒன்றிய செயலாளர்கள் ஏ.கே.சந்திரசேகரன், ரவிச்சந்திரன், நகர செயலாளர் வினோத் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர். இதேபோல் விசாகரை திமுகவினர் சந்தித்து ஆறுதல் கூறினர். திமுக ஒன்றிய கவுன்சிலர், அதிமுக ஊராட்சி தலைவரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.