உள்ளூர் செய்திகள்
தஞ்சைக்கு நாளை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வருகை
தஞ்சைக்கு நாளை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி முன்னாள் ராணுவத்தினர்களை சந்திக்கிறார்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை (12-ந் தேதி) தமிழக கவர்னர்ஆர்.என்.ரவி வருகை தர உள்ளார்.
இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் நாளை திருச்சிக்கு வரும் கவர்னர் ஆர்.என்.ரவி, அங்கிருந்து கார் மூலம் தஞ்சாவூருக்கு மதியம்
1 மணியளவில் வருகிறார்.
தஞ்சாவூர் சுற்றுலா மாளிகையில் மதிய உணவுக்கு பின்னர், 2.30 மணியளவில் முன்னாள் ராணுவத்தினர்களை சந்தித்து பேசுகிறார்.பின்னர் தஞ்சாவூர் பெரிய கோவில் மற்றும் சரஸ்வதி மகால் நூலகத்தை பார்வையிடுகிறார். இதையடுத்து இரவு தஞ்சாவூரில் தங்குகிறார்.
தொடர்ந்து மறுநாள் (13-ம் தேதி) காலை தஞ்சாவூரிலிருந்து கார் மூலம் கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி பாண்டுரங்கன் சமஸ்தான் கோவில் வளாகத்தில் நடைபெறும் விஸ்வ வித்யாலயா வேத பாடசாலைக்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தஞ்சாவூர் வந்து மதிய உணவுக்கு பின்னர், மாலையில் தென்னக பண்பாட்டு மையத்துக்கு சென்று, வடகிழக்கு மாநிலங்களின் கலைவிழாவான கைவினை பொருட்காட்சி மற்றும் உணவுத் திருவிழாவில் பங்கேற்கிறார்.
தொடர்ந்து மீண்டும் இரவில் தஞ்சாவூரில் தங்கும் ஆளுநர், 14-ம் தேதி காலை கார் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து விமானத்தில் சென்னை செல்கிறார்.