உள்ளூர் செய்திகள்
மயிலாடுதுறையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது.

இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

Published On 2022-03-11 14:01 IST   |   Update On 2022-03-11 14:01:00 IST
மயிலாடுதுறையில் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தனர்.
தரங்கம்பாடி:

சைவ திருமடங்களின் சமய மரபுகளில் தலையிட்டு இந்துக்களின் நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகளை கொச்சைப்படுத்தும் திராவிடர் கழகத்தை தடை செய்யக்கோரி நாளை (12-ந்தேதி) மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்து மக்கள் கட்சி காவிக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது.

நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொள்ளவிருந்த இந்த ஆர்பாட்டத்திற்கு மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளரால் அனுமதி மறுக்கப்பட்டது. 

இந்நிலையில் திராவிடர் கழகத்தை தடை செய்யக்கோரி இந்து மக்கள் கட்சி அறிவித்திருந்த காவிக் கொடி போராட்டம் தொடர்பாக மயிலாடுதுறை வருவாய் கோட்ட அலுவலகத்தில் கோட்டாட்சியர் பாலாஜி, தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

வட்டாட்சியர் ராகவன், துணை காவல் கண்காணிப்பாளர் வசுந்தராஜ், காவல் ஆய்வாளர் செல்வம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் சார்பாக மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன், மாவட்ட பொதுச்செயலாளர் பார்த்திபன், மாவட்ட துணைத்தலைவர் சொக்கலிங்கம், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், நகர தலைவர் முத்துகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் நிறைவாக ஆர்ப்பாட்டத்திற்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய முடியாத சூழல் உள்ளதால் வேறொரு தேதியில் இருபது நாட்களுக்கு முன் அறிவித்து அனுமதி பெற்று நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது.

Similar News