உள்ளூர் செய்திகள்
வாழ்வில் வெற்றி பெற 3 விஷயங்களை பின்பற்ற அறிவுறுத்தல்
தவறு செய்து விட்டால் மனசாட்சி உறுத்தும். மனசாட்சி என்று சாதாரணமாக சொல்ல முடியாது.
திருப்பூர்:
திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் மகளிர் தின விழா நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் நடராஜன் தலைமை வகித்தார்.
கோவை எஸ்.எஸ்.வி.எம்., நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் மணிமேகலை மோகன், அவினாசிலிங்கம் பல்கலை துணைவேந்தர் பாரதி ஹரிசங்கர் முன்னிலை வகித்தனர்.
இதில் கோவை, கே..ஜி., மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவத்சலம் பேசியதாவது:-
வாழ்வில் வெற்றி பெற வேண்டுமானால், மனிதன் மூன்று விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். முதலில் கடவுள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். நம் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டும். இந்த மூன்று விசயங்களும் நிச்சயம் வெற்றியைத் தரும். வேறு எந்த வகையிலும் தவறு செய்து வெற்றி பெற்றால், அதன் பின் காலம் முழுவதும் கஷ்டப்பட வேண்டும்.
தவறு செய்து விட்டால் மனசாட்சி உறுத்தும்.மனசாட்சி என்று சாதாரணமாக சொல்ல முடியாது. அது ஒரு நீதிபதி. அதை கடந்து யாராலும் எதையும் செய்து விட முடியாது. பெண்கள் இந்த நாட்டின் கண்கள். பெண்களுக்கு ஈடு எப்போதுமே பெண்கள் தான். ஒரு பெண் தன் குடும்பத்தில் கண்டிப்புடன் இருக்க வேண்டும்.
ஆண்கள் இந்த வெளி உலகத்தைத் தான் பார்க்கின்றனர், ஆனால், பெண்ணுக்கு குடும்பம் தான் உலகம்.
இவ்வாறு அவர் பேசினார்.