சுங்குவார்சத்திரம் அருகே செல்போனில் வேறொரு பெண்ணுடன் பேசியதை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை
ஸ்ரீபெரும்புதூர்:
உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 22). இவருக்கும் உறவுக்கார பெண் பூஜா விற்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இருவரும் சுங்குவார்சத்திரம் அடுத்த சோகண்டி பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்தனர். கிருஷ்ணன் சுங்குவார் சத்திரம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் கிருஷ்ணன் செல்போனில் நீண்டநேரம் வேறுஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது.
இதைகண்ட மனைவி பூஜா கணவரை கண்டித்தார். மேலும் கணவரிடம் இருந்த செல்போனை பறித்து வீசி உடைத்தார்.
இதனால் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் பூஜா குளியல் அறைக்கு சென்று விட்டார்.
இதில் மனம் உடைந்த கிருஷ்ணன் வீட்டில் மனைவியின் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிறிது நேரத்துக்குபின்னர் பூஜா குளியல் அறையில் இருந்து வெளியே வந்து பார்த்த போது கணவர் கிருஷ்ணன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து சுங்குவார்சத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் விரைந்து வந்து கிருஷ்ணனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.