உள்ளூர் செய்திகள்
பூசாரிகள் பணி நியமன ஆணை சான்று சமர்ப்பிக்க வேண்டுகோள்
பணி நியமன ஆணை பெறுவதற்கான சான்றுகளை சமர்ப்பித்திடுமாறு பூசாரிகள், அர்ச்சகர்களுக்கு, கோவில் பூசாரிகள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருப்பூர்:
தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 12,959 கோவில்களில் ஒரு கால பூஜை நடந்து வருகிறது. இவற்றில் பணியாற்றி வரும் பூசாரிகள், அர்ச்சகர்களுக்கு அறநிலையத்துறை மூலம் மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட பூசாரிகள் நல சங்க நிர்வாகிகள் கூறுகையில்,
குறைந்த வருவாய் கொண்ட ஒரு கால பூஜை நடைபெறும் கோவில்களில் பணியாற்றிவரும் பூசாரிகள், அர்ச்சகர்கள் பணி பாதுகாப்பு இன்றியும், பணி நியமன ஆணை கிடைக்காமலும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக கோரிக்கை அளித்திருந்த நிலையில் பூசாரிகள் அர்ச்சகர்களின் விபரங்களை அறநிலையத்துறை கேட்டுள்ளது.
ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வரும் பூசாரிகள், அர்ச்சகர்கள் அனைவரும் தங்கள் பகுதியில் உள்ள கோவில் ஆய்வாளர்களிடம் ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, மற்றும் செல்போன் எண், போலீசார் மூலம் வழங்கப்பட்ட தடையின்மை சான்று உள்ளிட்ட விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
அருகிலுள்ள இ-சேவை மையங்களை தொடர்பு கொண்டு நன்னடத்தை சான்று பெற்று, கோவில் ஆய்வாளரை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.