உள்ளூர் செய்திகள்
கதிர்நாவாய் பூச்சி தாக்கியதில் நெல்மணிகள் பதராக மாறி சேதம்
திருத்துறைப்பூண்டி அருகே கதிர்நாவாய் பூச்சி தாக்கியதில் நெல்மணிகள் பதராக மாறி சேதமடைந்துள்ளது.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே திருப்பத்தூர் கிராமத்தில் குறுவை அறுவடை பணிகள் முடிவடைந்து தாளடி நடவு மற்றும் விதைப்பு செய்தும் சாகுபடி செய்து வந்தனர். தற்போது பயிர்கள் அறுவடைக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் நெல்மணிகளை கதிர்நாவாய் என்ற பூச்சி தாக்கியதில் நெல்மணிகள் அனைத்தும் பதராக மாறியுள்ளது இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்:& பயிர்களை இலை கருக்கள் ஏற்கனவே தாக்கியது. இது குறித்து வேளாண்துறை அதிகாரிகளிடம் தெரிவித்து அதற்கான மருந்துகள் வாங்கி தெளித்து இலை கருக்கள் நோயிலிருந்து காப்பாற்றினோம். தாளடி நெல் பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 20 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்து மழை வெள்ளத்தில் இருந்து பாதுகாத்தும் வந்த நேரத்தில் கதிர் நாவாய் பூச்சி தாக்கியதில் நெல்மணிகள் அனைத்தும் பதராக மாறி உள்ளது.
இதனை அறுவடை செய்தால் ஏக்கர் ஒன்றுக்கு ஒரு மூட்டை மட்டுமே கிடைக்கிறது. மேலும் இதனை எந்திரம் கொண்டு அறுவடை செய்ய ஏக்கர் ஒன்றுக்கு ரூ.3000 வரை செலவு ஆகிறது.
மேலும் அறுவடை செய்யதாலும் ஒருமூட்டை மட்டும் கிடைக்கும் என்பதாலும் வயலில் நெல்லை அறுவடை செய்யாமல் அப்படியே போட்டு வைத்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அரசு உடனடியாக ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.