உள்ளூர் செய்திகள்
தி.மு.க. வேட்பாளர் சிவகாமி

நீலகிரி நெல்லியாளம் நகராட்சி தலைவரான பழங்குடியின பெண்

Published On 2022-03-05 16:44 IST   |   Update On 2022-03-05 16:44:00 IST
நெல்லியாளம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இதில் 13 வார்டுகளில் தி.மு.க. வெற்றி பெற்றது. அ.தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகியவை தலா 2 வார்டிலும், விடுதலை சிறுத்தைகள் மற்றும் சுயேச்சை தலா 1 வார்டிலும் வெற்றி பெற்றது. 

மேலும் சுயேச்சை கவுன்சிலர் காங்கிரசில் இணைந்ததால், தி.மு.க. கூட்டணி கவுன்சிலர்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது. இதனால் நெல்லி யாளம் நகராட்சி தலைவர், துணைத்தலைவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருந்தது.

இந்த நிலையில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. தலைவர் பதவிக்கு தி.மு.க. வேட்பாளர் சிவகாமி போட்டியிட்டார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. இதனால் ஒருமனதாக சிவகாமி தேர்வு செய்யப்பட்டார். 

இவர் பழங்குடியின பெண் ஆவார். இதையடுத்து துணைத்தலைவர் பதவிக்கு தி.மு.க. வேட்பாளர் நாகராஜ் போட்டியிட்டார். அவரை எதிர்த்தும் யாரும் போட்டியிடா ததால், ஒரு மனதாக தேர்வானார். அவர்களுக்கு ஆணையாளர் அப்துல் ஹாரீஸ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்

நீலகிரி மாவட்டம் தேவர்சோலை பேரூராட்சிக்கான தலைவர் தேர்தல் நேற்று நடந்தது. தலைவர் பதவிக்கு தி.மு.க. வேட்பாளராக 9-வது வார்டு கவுன்சிலர் வள்ளி போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதே கட்சியை சேர்ந்த 17-வது வார்டு கவுன்சிலர் பொன்னி களம் இறங்கினார். இதில் 10 வாக்குகள் பெற்று வள்ளி வெற்றி பெற்றார். துணைத்தலைவராக காங்கிரசை சேர்ந்த யுனெஸ் பாபு 12 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

Similar News