உள்ளூர் செய்திகள்
விவசாயிகளுக்கு வர்த்தக தொடர்பு பணிமனை பயிற்சி
வைத்தீஸ்வரன்கோவிலில் வர்த்தக தொடர்பு பணிமனை பயிற்சியில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவில் தமிழ்நாடு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பாக விவசாயிகள் தங்களது பொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்துதல் தொடர்பாக இரண்டு நாட்கள் வர்த்தக தொடர்பு பணிமனை பயிற்சி முகாம் தொடங்கியது.
விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை குறைந்த விலைக்கு விற்பதை தடுக்கவும், மதிப்புக்கூட்டு பொருளாக உற்பத்தி செய்து நிலையான லாபம் பெறும் நோக்கிலும் இப்பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் முகாமை சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் நாராயணன் தொடக்கி வைத்தார். வேளாண்மை துணை இயக்குனர், வேளாண் வணிகம் சங்கரநாராயணன் இத்திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கவுரை ஆற்றினார்.
மாவட்ட வளர்ச்சி மேலாளர் நபார்டு, முன்னோடி வங்கி மேலாளர், வேளாண்மை துணை இயக்குநர், வேளாண்மை அலுவலர் வேளாண் வணிகம் கலந்து கொண்டு விவசாயிகளுக்கான ஆலோச னைகளை வழங்கினர். முகாமில் இயற்கை சாகுபடி காய்கறிகள், பாரம்பரிய நெல் ரகங்கள், விவசாய மதிப்புக்கூட்டு பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை குறித்து நேரடி விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் கருவாடு தயாரிப்பு, மீன் மதிப்பு கூட்டு பொருள் தயாரிப்பு, பனை ஓலை பொருட்கள் மற்றும் சணல் பை தயாரிப்பு உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு விவசாயிகளுக்கு நேரடி விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் வேளாண் துறை, வேளாண் வணிகத்துறை, கால்நடை துறை, மீன்வளத்துறை மற்றும் இயற்கை விவசாயிகள் உற்பத்தியாளர்கள் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.