உள்ளூர் செய்திகள்
இயக்குநர் கரு.பழனியப்பனுக்கு முக்குலத்து புலிகள் கட்சி கண்டனம்.
கள்ளன் என படத்திற்கு பெயரிட்டு சமுதாய மக்களை இயக்குநர் கரு.பழனியப்பன் சீண்டுகிறார் என்று கூறி அவருக்கு முக்குலத்து புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம்:
முக்குலத்துப்புலிகள் கட்சி நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் கூறியிருப்பதாவது:-
திரைப்பட இயக்குனரும், சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் உள்ள கரு.பழனியப்பன் நடிப்பில் கள்ளன் என்ற பெயர் சூட்டப்பட்ட திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதில் 4 குற்றவாளிகள் காவல்துறையால் கைகட்டி உட்கார வைக்கப்பட்டுள்ளதாக காட்சியமைக்கப்பட்டு, அந்த படத்துக்கு தமிழகத்தின் போர்க்குடி சமூகமாகவும், பெரும்பான்மை சமூகங்களில் ஒன்றாகவும் விளங்குகிற கள்ளர் இன மக்களின் சாதிப்பெயரை குறிக்கும் வகையில் கள்ளன் என்று பெயரிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திட்டமிட்டு சாதிக்கலவரத்தை, வன்முறையை தூண்டும் வகையில் படக்குழுவினர் உள்நோக்கத்துடன் பெயர் வைத்துள்ளனர்.
ஒரு குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய தலைப்பை வைத்து பிரச்சினைகளை தூண்டி அதனால் வரும் நெகட்டிவ் பப்ளிசிட்டியால் படத்துக்கு விளம்பரம் தேடும் மலிவான செயல் திரைத்துறையில் சமீபத்தில் நடந்து வருகிறது.
இதற்காக கள்ளர் சமுதாய மக்களை சீண்டினால் அதற்கான எதிர்விளைவுகளை படக்குழுவினர் சந்திக்க நேரிடும். இதற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதோடு, இந்த படத்தின் தலைப்பை உடனடியாக மாற்ற வேண்டும் என்று இந்த படக்குழுவினரை வலியுறுத்துகின்றேன் என கூறியுள்ளார்.