உள்ளூர் செய்திகள்
தேசிய அறிவியல் வார விழா வினாடி- வினா போட்டி
ஆன்லைன்’ வாயிலாக நடத்தப்பட்ட இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
உடுமலை:
தேசிய அறிவியல் வார விழாவையொட்டி உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் வாயிலாக பள்ளி மாணவர்கள் இடையிலான ஓவியம் மற்றும் அறிவியல் வினாடி-வினா போட்டி நடந்தது.
‘ஆன்லைன்’ வாயிலாக நடத்தப்பட்ட இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
அதில் 175 பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் கோவை ஜான்சன்ஸ் கல்லூரியில் இரண்டாம் கட்ட போட்டி நடந்தது. அதில், 9 மற்றும் 10-ம் வகுப்பு பிரிவில், உடுமலை எஸ்.வி.ஜி., மேல்நிலைப்பள்ளி மாணவிகள் நிவேதா, மித்ராஸ்ரீ ஆகியோர் முதலிடமும், 6ம் வகுப்பு பிரிவில், சீனிவாசா மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்ரீதர்சினி முதலிடமும் வென்றனர்.
இவர்களை ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான், உடுமலை சுற்றுச்சூழல் சங்க செயலாளர் நாகராஜன் உள்ளிட்ட பலர் வாழ்த்தினர்.
பல்லடம் வடுகபாளையம் அரசு பள்ளியில் தேசிய அறிவியல் தின நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியை காஞ்சனா தேவி தலைமை வகித்தார்.
தொடக்க கல்வி அலுவலர் சசிகலா மற்றும் உதவி தொடக்க கல்வி அலுவலர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு மாணவர்களிடயே பேச்சு, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
முன்னதாக மாணவர்கள் அனைவரும் சி.வி.ராமன் உருவ முக கவசம் அணிந்தபடி பங்கேற்றனர். விழாவில் ஆசிரியர்கள், இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்களும் பங்கேற்றனர்.