உள்ளூர் செய்திகள்
சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை - டிஜிபி எச்சரிக்கை
அரசு வேலை வாங்கித் தருவதாக சிலர் பொய்யான தகவல்களை பரப்பி பலரிடம் இருந்து பணத்தை வாங்கி ஏமாற்றுகின்றனர்.
சென்னை:
சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகளை பரப்புவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதாகவும், இதனை மக்கள் உண்மை என நம்பி ஏமாறுவதாகவும் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை புத்தக கண்காட்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் பேசுகையில்:
அரசு வேலை வாங்கித் தருவதாக சிலர் பொய்யான தகவல்களை பரப்பி பலரிடம் இருந்து பணத்தை வாங்கி ஏமாற்றுகின்றனர். இதனால் உண்மையை உணராத மக்கள் ஏமாற்றமடைகின்றனர்.
நாம் கேட்கக்கூடிய செய்திகள் மற்றும் பார்க்கக்கூடிய பார்வைகளில் எது உண்மை என்று அறிந்த கொள்ள நிறைய புத்தகங்களை படிக்க வேண்டும். அப்போதுதான் தெளிவான முடிவுகள் எடுக்க முடியும்.
குறிப்பிட்ட கொள்கைகளில் தீவிரமாக ஈடுபடுவோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர், சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை பரப்புகின்றனர்.
அவர்களை கண்டறிந்து காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.