உள்ளூர் செய்திகள்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்தாண்டு குடும்பநல அறுவை சிகிச்சை செய்து கொண்ட 6 பேருக்கு உதவித்தொகை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்தாண்டு குடும்பநல அறுவை சிகிச்சை செய்து கொண்ட 6 பேருக்கு உதவித்தொகை கலெக்டர் வழங்கினார்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குடும்ப நலத்துறையின் மூலமாக நவீன குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொண்ட 6 ஆண்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான சமையல் பொருட்கள் மற்றும் நிதி உதவி ரூ.1000 ஆகியவற்றை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம் கடந்த ஆண்டு 21.11.2021 முதல் 31.12.2021 வரை அரசு வேலூர் மருத்துவகல்லூரி மருத்துவமனை அடுக்கம்பாறை, அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற்றது.
இந்த சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு அறுவை சிகிச்சை செய்துகொண்ட 6 ஆண்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் அன்பளிப்பு தொகை ரூ.1000 ஆகியவற்றை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கிபேசியதாவது: பெண்களை காட்டிலும் ஆண்களுக்கு இந்த சிகிச்சை மேற்கொள்வது மிகவும் எளிதானது. எந்தவித பக்க விளைவுகள் கிடையாது.
மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய அவசியமில்லை. இந்த அறுவை சிகிச்சையை செய்து கொண்ட ஆண்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு பேசினார்.நிகழ்ச்சியில் துணை இயக்குனர்கள் மருத்துவர் மணிமேகலை, மருத்துவர் மணிமாறன், ஆண்கள் குடும்ப நல அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கீர்த்தி, மாவட்ட விரிவாக்க கல்வியாளர் பழனி மலை, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி நிர்வாகிகள் ரகுநாதன், பரத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.