உள்ளூர் செய்திகள்
பழமையான நெசவு தொழிலை மீட்க நெசவாளர்கள் வலியுறுத்தல்
பழமையான நெசவு தொழிலை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம், மேலபுலம், திருமால்பூர், நெமிலி, கீழ் வெண்பாக்கம், நாகவேடு, சம்பத்ராயன் பேட்டை, திருப்பாற்கடல், சோளிங்கர் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் விசைத்தறி நெசவுத் தொழில் பிரதானமாக நடைபெற்று வருகிறது.
இந்த தொழிலை நம்பி சுமார் 10 ஆயிரம் குடும்பங்கள் வாழ்ந்து வருகிறது.சமீப காலமாக நூல் விலை உயர்வு, ஜிஎஸ்டி உள்ளிட்ட காரணங்களால் விசைத்தறி நெசவு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தனியாரிடம் ஒப்பந்தம் செய்து பாவு எடுத்து காலங்காலமாக நெசவு செய்து வரும் தொழிலாளர்கள் நூல் விலை உயர்வால் சரிவர தாங்கள் நெசவு தொழில் செய்ய தேவையான மூலப்பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பெரும்பாலான நெசவாளர்கள் பாரம்பரிய தொழிலை விட்டுவிட்டு சமையல் வேலை, செக்யூரிட்டி உள்ளிட்ட வேறு வேலைக்கு சென்று வருகின்றனர்.மேலும் பலர் தங்களின் விசைத்தறி உதிரி பாகங்களை உடைத்து எடைக்கு போடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து விசைத்தறி நெசவாளர்கள் கூறியதாவது:-
எங்களுக்கு இந்த தொழிலை விட்டால் வேறு எதுவும் தெரியாது.நாங்கள் குடும்பத்தோடு சேர்ந்து உழைத்தும் போதுமான அளவில் வருமானம் கிடைக்கவில்லை.கூலி உயர்வு கொடுத்து பல வருடங்கள் ஆகிவிட்டது.
விசைத்தறி நெசவுத் தொழிலை முதலில் அரசு அங்கீகாரம் செய்ய வேண்டும்.விவசாயிகளுக்கு விதை, உரம், மானியக்கடன் உள்ளிட்ட சலுகைகள் வழங்குவது போல், விசைத்தறி நெசவாளர்களுக்கும் வழங்கவேண்டும்.
மேலும் தனித்துறை அமைத்து அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.நெசவாளர்களுக்கு கடன் வழங்க தனி வங்கி ஏற்படுத்த வேண்டும்.நூல் உள்ளிட்ட மூலப்பொருட்களை கொடுத்து உதவ வேண்டும் என நெசவாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.