உள்ளூர் செய்திகள்
முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா
ஆலங்குடி கோவிலூர் முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடை பெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கோவிலூரில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நேற்று இரவு நடைபெற்றது.
ஆண்டுதோறும் வழக்கமாக நடைபெறும் மாசித்திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நேற்று ஞாயிற்றுக் கிழமை இரவு நடைபெற்றது. சிங்கவள நாட்டை சேர்ந்த கிராமங்களிலிருந்து பூக்கள் கொண்டு அதை அம்மன் சன்னதியில் கொட்டி வைத்தனர்.
பின்னர் அந்த பூக்களை சப்பர வண்டியில் ஏற்றி நான்கு வீதிகளையும் சுற்றி வந்தது. சப்பர வாகனம் கோவில் சன்னதி வந்ததும் மீண்டும் எல்லா பூக்களையும் அம்மன் சன்னதியில் கொட்டி வைத்தனர்.
பின்னர் அம்பாளுக்கு பூசாரிக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து மிராஸ்தாரர்களால் பொதுமக்கள் முன்னிலையில் அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடை பெற்றது.
பூச்சொரிதல் விழாவைத் தொடர்ந்து அம்பாளுக்கு சாற்றப்பட்ட பூக்கள் கிராம மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது