உள்ளூர் செய்திகள்
தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்
சீர்காழி புதிய பஸ் நிலையத்தில் தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பகுதியை சேர்ந்தவருக்கு சொந்தமான தனியார் பஸ் நேற்று இரவு சிதம்பரத்திலிருந்து சீர்காழி வழியாக காரைக்கால் நோக்கி சென்றது.
அப்போது சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்குள் வந்து திரும்பும்போது 15-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் பஸ்சை வழிமறித்து கண்டக்டர் மேல மணக்குடி பகுதியை சேர்ந்த சபரிநாதன் (27) மற்றும் சீர்காழி பகுதியை சேர்ந்த டிரைவர் பத்மநாபன் (20) இருவரையும் அடித்து உதைத்து விட்டு தலைமறைவாகி விட்டனர்.
இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சபரிநாதன், பத்மநாபன் இருவரும் சீர்காழி போலீசில் புகார் செய்தனர்.
இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.