உள்ளூர் செய்திகள்
கள்ள ஓட்டு போட்ட பெண்ணை பிடித்து கொடுத்த தி.மு.க.வினர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் கள்ள ஓட்டு போட்ட பெண்ணை தி.மு.க.வினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சீதாராம் மேடு அருகேயுள்ள, அரசினர் பெண்கள் மேல் நிலைப்பள்ளி அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் நேற்று மாலை விறு விறுப்பாக வாக்குப் பதிவு நடைபெற்றுக் கொண் டிருந்தது.
அப்போது, கள்ள ஓட்டுபோட்டதாக பெண் ஒருவரை, 27-வது வார்டு தி.மு.க வேட்பாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அதிகாரிகளிடம் பிடித்துகொடுத்தனர். விசாரணையில், அந்த பெண், ஓசூர் பார்வதி நகரை சேர்ந்த வேலு என்பவரது மனைவி புஷ்பா (வயது 48) என்பதும், ஓசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆயாவாக பணி செய்து வருவதும் தெரியவந்தது.
அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் வாக்காளர் அட்டையை போலியாக பயன்படுத்தியதும் தெரிய வந்தது. அந்த பெண்ணின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் தி.மு.க.வினர் வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து புஷ்பாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.