உள்ளூர் செய்திகள்
செங்கோட்டை அருகே மின்கம்பத்தில் படர்ந்துள்ள கொடியால் விபத்து அபாயம்
செங்கோட்டை அருகே கட்டளை குடியிருப்பு அருகே உள்ள ஒரு மின்கம்பத்தில் படர்ந்துள்ள கொடியால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கோட்டை:
செங்கோட்டை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை மிகவும் பிரதான சாலையாகும். இச்சாலை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த பிரதான சாலையில் செங்கோட்டை கட்டளை குடியிருப்பு அருகே உயர்அழுத்த மின் கம்பி செல்லும் மின்கம்பம் உள்ளது.
இந்த மின்கம்பத்தை சுற்றி வளர்ந்துள்ள செடி, கொடிகள், கம்பத்தில் படர்ந்து, உச்சி வரை சென்று, மின் கம்பிகளில் தொங்கிக்கொண்டிருக்கிறது. மழைக்காலங்களில் கொடிகளின் மூலம் மின்சாரம் பாய்ந்து, சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
மின்வாரிய அதிகாரிகள், கம்பத்தை சுற்றி வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.