உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரியில் இதுவரை பறக்கும் படையினர் சோதனையில் ரூ.31 லட்சம் சிக்கியது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ரூ.31 லட்சம் சிக்கியது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி நடந்த சோதனையில் பறக்கும் படையினர் ரூ.31 லட்சம் பறிமுதல் செய்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திரபானு ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:&
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஒரு மாநகராட்சி, ஒரு நகராட்சி மற்றும் 6 பேரூராட்சிகளில் வரகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதில், 1 லட்சத்து 83 ஆயிரத்து, 143 ஆண்கள், 1 லட்சத்து, 81 ஆயிரத்து, 681 பெண்கள், இதரர் 131 பேர் என 3 லட்சத்து, 64 ஆயிரத்து, 955 பேர் வாக்களிக்க உள்ளனர்.
இதற்காக கிருஷ்ணகிரி நகராட்சியில் 66 வாக்கு சாவடிகள், ஓசூர் மாநகராட்சியில் 248, பர்கூர் 16, தேன்கனிக்கோட்டையில் 28, காவேரிப்பட்டணம் மற்றும் ஊத்தங்கரையில் தலா 18, நாகோஜனஹள்ளி மற்றும் கெலமங்கலத்தில் தலா 15 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 424 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கொரோனா தடுப்பு உபகரணங்கள், ஓட்டுபதிவு எந்திரம் உள்ளிட்டவைகள் தேர்தலுக்கு முந்தைய நாள் மாலை அனுப்பப்படும். வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு மூன்று கட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். மாவட்டத்தில் பதற்றமான, 66 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா, கூடுதல் அலுவலர்கள், போலீசார் நியமிக்கப்படுவர்.
இதுவரை தேர்தல் தொடர்பாக 27 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.31 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.25 லட்சம் ஒரே இடத்தில் பறிமுதல் செய்யப்பட்டதால், அதை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்துள்ளோம். தேர்தல் பணிகளில் மாவட்ட முழுவதும் 4,800 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.