உள்ளூர் செய்திகள்
தந்தையை கொன்றதால் பழிக்குப்பழி: ராணுவ வீரரை வெட்டி கொன்ற மனைவி கிருஷ்ணகிரி கோர்ட்டில் சரண்
மத்தூர் அருகே ராணுவ வீரரை கொலை செய்த சம்பவத்தில் மனைவி கோர்ட்டில் சரணடைந்த நிலையில் 7 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பண்ணத்தூர் இந்திரா நகரை சேர்ந்தவர் நரேஷ்குமார் (வயது 42). இவரது மனைவி சசிகலா(38). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
நரேஷ் குமார், காஷ்மீரில் லாக் டோரா பகுதியில் ராணுவ வீரராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு கொண்டே வந்ததால் சசிகலா கோபத்தில் தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதற்கிடையே ராணுவ பணிக்கு சென்றிருந்த நரேஷ்குமார், கடந்த 10 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு திரும்பினார். கடந்த 13-ந் தேதி மதுபோதையில் இருந்த நரேஷ்குமார், மனைவி சசிகலா வீட்டுக்கு சென்று தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். இதற்கு சசிகலா மறுப்பு தெரிவித்து திட்டியுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாய்தகராறு ஏற்பட்டது.
இதில் ஒருவரையொருவர் கைகளால் தாக்கி கொண்டனர். அப்போது ஆத்திரத்தின் உச்சியில் இருந்த சசிகலா, தாலி கட்டிய கணவன் என்றும் பாராமல் நரேஷ்குமார் கண்ணில் மிளகாய் பொடியை தூவினார். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த நரேஷ்குமாரை உருட்டுக் கட்டையால் தாக்கினார். மேலும் அங்கு நின்ற சசிகலாவின் உறவினர்களும் சரமாரியாக நரேஷ் குமாரை தாக்கினர்.
அப்போது திடீரென ஆவேசத்தில் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் நரேஷ்குமாரை அரிவாளால் வெட்டினர். இதில் ரத்தவெள்ளத்தில் சாய்ந்த நரேஷ்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
இதுகுறித்து பாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் போலீசாரிடம் நரேஷ்குமார் அளித்த மரண வாக்குமூலத்தில் தன்னை தனது மனைவி சசிகலா மற்றும் உறவினர்கள் 7 பேர் மிளகாய் பொடி தூவி அரிவாளால் வெட்டியதாக தெரிவித்தார்.
இதையடுத்து பாரூர் போலீசார் , சசிகலா மற்றும் அவரது உறவினர்களான திருப்பூர் ஆயுதப்படை போலீஸ் காரர் மகேஸ்வரன், அவரது மனைவி ராஜ்குமார், முன்னாள் ராணுவ வீரர் பரமேஸ்வரன், அவரது மனைவி தீபா, மற்றும் ராஜ்குமார், வடிவேலு, சதீஷ் ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் போலீசார் தன்னை தேடுவதை அறிந்த சசிகலா, நேற்று கிருஷ்ணகிரி கோர்ட்டில் சரண் அடைந்தார். இதையடுத்து போலீசார், அவரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.
ராணுவ வீரர் நரேஷ்குமாரை அவரது மனைவி ஈவு இரக்கமில்லாமல் கண்ணில் மிளகாய் பொடி தூவி கொன்றது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வந்தனர்.
இதில் தனது தந்தையை கொன்ற நரேஷ்குமாரை பழிக்குபழியாக சசிகலா கொலை செய்தது தெரிய வந்தது.
அதாவது கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நரேஷ் குமாருக்கும், சசிகலாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் சசிகலா தனது குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றார்.
இதனால் குடிபோதையில் நரேஷ் குமார் சசிகலா வீட்டுக்கு சென்றார். அங்கு சசிகலாவிடம் தகராறு செய்ததால் அவரது தந்தை மகாலிங்கம் (58) தட்டி கேட்டார். அப்போது ஆத்திரம் அடைந்த நரேஷ்குமார், மாமனார் என்றும் பாராமல் அரிவாளால் வெட்டி கொன்றார். அப்போது இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நரேஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் நீதிமன்ற ஜாமீனில் வெளியே வந்து ராணுவ பணிக்கு சென்று விட்டார். இந்த வழக்கு கோர்ட்டில நிலுவையில் இருந்து வந்தது.
தன் கண்முன்பே தந்தை வெட்டிக்கொன்ற கணவர் நரேஷ்குமார் மீது சசிகலாவுக்கு வெறுப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தான் கடந்த 13-ந் தேதி நரேஷ்குமார், ஊருக்கு வந்து சசிகலாவிடம் குடிபோதையில் தகராறு செய்துள்ளார். ஏற்கனவே தந்தையை கொலை செய்த நரேஷ்குமார் மீது ஆத்திரத்தில் இருந்ததால் மிளகாய் பொடி தூவி கொலை செய்தது தெரிய வந்தது.