உள்ளூர் செய்திகள்
குடும்பதகராறில் மனைவியை கொன்ற கணவன் கைது
குடும்பதகராறில் மனைவியை கொன்ற கணவனை போலீசார் கைது செய்து விசாரணை.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள ஒகளூர் கிராமம், அம்பேத்கார் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி ஆறுமுகம் இவரது மனைவி முத்துலட்சுமி (வயது45). இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் ஆறுமுகத்திற்கு குடிப்பழக்கம் உள்ளது என்றும், அதனால் கணவன்& மனைவி இடையே அடிக்கடி தகராறு நடக்கும் என கூறப்படுகிறது.
நேற்று வீட்டில் முத்துலட்சுமி சமையலுக்காக கோழி இறைச்சியை வெட்டி கொண்டு இருந்தார். அப்போது அவருக்கும் ஆறுமுகத்திற்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம், இறைச்சி வெட்ட வைத்திருந்த அரிவாளை எடுத்து முத்துலட்சுமியின் கழுத்து மற்றும் தலையில் சரமாரியாக வெட்டியதாக தெரிகிறது. இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் முத்துலட்சுமி துடி துடித்து உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்கு பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.