உள்ளூர் செய்திகள்
காட்பாடியில் ஆட்டோ பைக் மோதி 2 பேர் சாவு
காட்பாடியில் ஆட்டோ பைக் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
வேலூர்:
வேலூர் தொரப்பாடி முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 35) ஜீவா நகரை சேர்ந்தவர் (கார்த்தி 23) இருவரும் வேலூரில் உள்ள பஞ்சு மிட்டாய் பாப்கான் விற்பனை செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். நேற்று வள்ளிமலை தேர் திருவிழாவில் பஞ்சுமிட்டாய் விற்பதற்காக ஆட்டோவில் சென்றனர்.
அங்கு விற்பனை முடிந்து நேற்று நள்ளிரவு வீட்டிற்கு புறப்பட்டனர். காட்பாடி வள்ளிமலை ரோட்டில் உள்ள பள்ளிக்குப்பம் ரெயில்வே கேட் அருகே இரவு 12.30 மணிக்கு பஞ்சுமிட்டாய் ஏற்றிய ஆட்டோவில் வந்து கொண்டிருந்தனர். அப்போது சேண்பள்ளி அடுத்த ஸ்ரீபாத நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஆல்பர்ட் என்பவர் வேலூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
அவர் ஆட்டோ மீது வேகமாக மோதினார். இதில் ராஜசேகர், கார்த்தி, ஆல்பர்ட் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். காட்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரையும் மீட்டனர்.
ராஜசேகர், கார்த்தி இருவரையும் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ராஜசேகர் பரிதாபமாக இறந்தார்.ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட கார்த்தி சிகிச்சை பலனின்றி பலியானார்.
ஆல்பர்ட் வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் பலியான ராஜசேகருக்கு திருமணமாகி தேவி என்ற மனைவி உள்ளார். கார்த்திக்கிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
தேர்த் திருவிழாவில் பஞ்சுமிட்டாய் விற்பனை செய்துவிட்டு வந்த வாலிபர்கள் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் வேலூரில் பரபரப்பு ஏற்படுத்தியது.