உள்ளூர் செய்திகள்
கொலை

மிளகாய் பொடி தூவி ராணுவ வீரரை கொன்ற மனைவி

Published On 2022-02-15 12:10 IST   |   Update On 2022-02-15 12:10:00 IST
போச்சம்பள்ளி அருகே கணவரை கொலை செய்து தலைமறைவான மனைவியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள பண்ணந்தூர் இந்திரா காலனியை சேர்ந்தவர் நரேஷ்குமார் (வயது42). ராணுவ வீரர். இவரது மனைவி சசிகலா. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கணவன்-மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனால் நரேஷ்குமார் ராணுவத்துக்கு சென்று விட்டார்.

இதையடுத்து பல மாதங்களுக்கு பிறகு நேற்று விடுமுறையில் நரேஷ்குமார் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தாய் வீட்டில் இருந்த மனைவி சசிகலாவை குடும்பம் நடத்த குடிபோதையில் சென்று அழைத்துள்ளார்.

இதனால் கணவன்-மனைவிக்கு வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சசிகலா வீட்டில் இருந்த மிளகாய் பொடியை கணவர் நரேஷ்குமார் முகத்தில் தூவியும் கட்டையால் தாக்கியும் மற்றும் கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது.

இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே படுகாயம் அடைந்த அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்றுஅதிகாலை நரேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து பாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கணவரை கொலை செய்து தலைமறைவான சசிகலாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News