உள்ளூர் செய்திகள்
மழைவிட்டும் வயலில் நீர் வடியாததால் நெல்மணிகள் முளைத்து வரும் அவலம்
நாகை அருகே மழைவிட்டும் வயலில் நீர் வடியாததால் நெல்மணிகள் முளைத்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த பிரதாபராமபுரம் ஊராட்சி கழுவன்குளம், ஏரிக்கரை சந்திரநதி, கைகாட்டி உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சுமார் ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான கோ46 வகை சம்பா நெல் பயிர் அறுவடைக்குத் தயாராகி வந்தது.
இன்னும் 10 நாட்களில் எந்திரம் மூலமாக அறுவடை செய்யப்பட உள்ள நிலையில் தற்போது பருவம் தவறி பெய்த மழையால், வயலில் தண்ணீர் தேங்கியுள்ளது.
மேலும் தொடர் மழையால் நெல்லின் பாரம் தாங்காமல் வயலில் சாய்ந்து தற்பொழுது நீரில் மூழ்கியுள்ளது. மழை தணிந்து இரண்டு நாட்களான நிலையிலும் வயல்களில் இருந்து மழை நீர் வடியாததால் நெல்மணிகள் முளைக்கத் தொடங்கி இருப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரடி ஆய்வு மேற்கொண்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.