உள்ளூர் செய்திகள்
கோவை மத்திய ஜெயிலில் விசாரணை கைதி திடீர் சாவு
ஜெயிலில் இருந்த ஆனந்தகுமார் திடீரென நெஞ்சை பிடித்தபடி மயங்கி விழுந்தார்.
கோவை:
கோவை கோவில்மேடு அருகே உள்ள மகேஸ்வரி காலனியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 48). இவர் துடியலூர் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட ஒரு கொலை வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.
பின்னர் நீதிமன்ற காவலில் ஈரோடு மாவட்ட பெருந்துறையில் உள்ள சப்- ஜெயிலில் அடைப்பட்டார். 29-ந்தேதி ஆனந்தகுமார் கோவை மத்திய ஜெயிலுக்கு மாற்றப்பட்டார்.
இவர் கடந்த 20 வருடங்களாக ரத்த அழுத்தத்துக்கு சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று ஜெயிலில் இருந்த ஆனந்த குமார் திடீரென நெஞ்சை பிடித்தபடி மயங்கி விழுந்தார். இதனை பார்த்த சக கைதிகள் இது குறித்து சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் உடனடியாக டாக்டர்களுடன் விரைந்து சென்றனர். அங்கு ஆனந்தகுமாரை பரிசோதனை செய்த டாக்டர் சிகிச்சைக்காக உடனடியாக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வேண்டும் என கூறினார்.
இதனையடுத்து அவரை ஜெயில் அதிகாரிகள் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஆனந்தகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.