உள்ளூர் செய்திகள்
காதர் மைதீனை வரவேற்ற குடும்பத்தினர்

ஒட்டகம் மேய்க்க வைத்து சித்ரவதை- கத்தார் நாட்டில் சிக்கிய ராமநாதபுரம் வாலிபர் மீட்பு

Published On 2022-02-14 16:05 IST   |   Update On 2022-02-14 16:05:00 IST
கத்தார் நாட்டில் ஒட்டகம் மேய்க்க வைத்து சித்ரவதை செய்யப்பட்ட ராமநாதபுரம் வாலிபர் காதர்மைதீன் இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தார்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் மேற்கு தெருவை சேர்ந்தவர் காதர் மைதீன் (வயது39). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

இவரது குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதை தொடர்ந்து வெளிநாடு செல்ல முடிவு செய்து கத்தார் நாட்டுக்கு டிரைவர் வேலைக்கு பணம் செலுத்தி கடந்த ஜூலை மாதம் புறப்பட்டார்.

டிரைவர் வேலைக்காக சென்ற காதர் மைதீனுக்கு அங்கு ஒட்டகம் மேய்க்கும் வேலை காத்திருந்தது. டிரைவர் வேலைக்குதான் வந்தேன். ஒட்டகம் மேய்க்க தெரியாது என்று தெரிவித்ததும் அங்கு அரபி சித்ரவதை செய்தார். சம்பளமும், சரியான உணவும் கிடைக்காமல் காதர் மைதீன் சிரமப்பட்டார்.

அவரது நிலை குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்த செய்தி மாலை மலரில் கடந்த 4-ந்தேதி வெளியானது. அவரை மீட்க பல்வேறு தரப்பினரும் முயற்சி மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து அவரை வேலைக்கு வைத்த அரபி அவரை அழைத்து வந்து தூதரகத்தில் ஒப்படைத்தார். இன்று அதிகாலை காதர்மைதீன் சென்னை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் அங்கு நின்று கொண்டிருந்த மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.


Similar News