உள்ளூர் செய்திகள்
தாரமங்கலம் அருகே பெண் மர்ம சாவு
தாரமங்கலம் அருகே பெண் சாவில் மர்மம் இருப்பதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாரமங்கலம்:
சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 52). இவருடைய மகள் அமுதா (29). இவருக்கும், தாரமங்கலம் அருகே உள்ள செம்மண்கூடல் பகுதியை சேர்ந்த ஜெயகண்ணன் என்பருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. மது அருந்தும் பழக்கம் உள்ள ஜெயகண்ணன், அடிக்கடி குடித்துவிட்டு வந்து வீட்டில் மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அமுதா செம்மண்கூடல் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் கிடைத்ததும் அங்கு வந்த அமுதாவின் தந்தை ஸ்ரீதர் சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.
அதில் தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அமுதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அமுதாவின் மர்ம சாவு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது எவ்வாறு இறந்தார்? சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.