உள்ளூர் செய்திகள்
ராமநாதபுரம் அரசு மருத்துவமனை

நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Published On 2022-02-13 11:00 GMT   |   Update On 2022-02-13 11:00 GMT
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட மருத்துவமனை 2021ம் ஆண்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டது.  இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின்  எண்ணிக்கை இரு மடங்காகியுள்ளது. 

2020ம் ஆண்டு இந்த  மருத்துவமனையில் புறநோயாளிகள் 2 லட்சத்து 98 ஆயிரத்து 737 ஆக இருந்த நிலையில், அந்த எண்ணிக்கை 2021ம் ஆண்டு 4 லட்சமாக உயர்ந்துள்ளது.

கடந்த டிசம்பரில் இந்த மருத்துவமனையில் 64,674 பேர் சிகிச்சைக்காக வந்துள்ளனர். அவர்களில் 3,706 பேர் உள்நோயாளிகளாக சேர்ந்துள்ளனர். பிரசவத்துக்கு 416 பெண்கள் சேர்ந்த நிலையில், 148 பேருக்கு அறுவை சிகிச்சையின்றி குழந்தை பிறந்துள்ளது. 

2022 ஜனவரியில் 71,650 பேர் புறநோயாளிகள் சிகிச்சைக்கு வந்துள்ளனர். அவர்களில் 3,151 பேர் உள்நோயாளிகளாக சேர்ந்துள்ளனர். பிரசவத்துக்காக 322 பெண்கள் சேர்ந்த நிலையில், 153 பேருக்கு அறுவை சிகிச்சையின்றி சுகப்பிரசவம் நடந்துள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் சாலைத்தெரு சண்முகம் கூறுகையில், நகரில் தெருக்களில் முறையாக கொசு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாததால் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு ஏராளமான நோயாளிகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

ஆண்டுக்கு ஆண்டு நோயாளிகளின் எண்ணிக்கை  அதிகரிப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சுகாதாரத்துறை  முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
Tags:    

Similar News