உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வேலூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நாளை 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு

Published On 2022-02-09 15:45 IST   |   Update On 2022-02-09 15:45:00 IST
வேலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நாளை 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு 3 இடங்களில் நடக்கிறது.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சி, குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சிகள், ஒடுகத்தூர், பென்னாத்தூர், பள்ளிகொண்டா, திருவலம் ஆகிய பேரூராட்சிகளுக்கு நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. 178 வார்டு கவுன்சிலர் பதவிக்கு 819 பேர் போட்டியிடுகிறார்கள். 

தேர்தலுக்காக 628 வாக்குச்சாவடிகள் தயார் செய்யப்பட்டுள்ளது. நகர்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் 3,101 வாக்குச்சாவடி அலுவலர்கள் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கு கடந்த 31-ந் தேதி முதற்கட்ட பயிற்சி நடந்தது. 

இந்த நிலையில் இன்று 10- மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு நடைபெறுவதால் 2-ம் கட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நாளை நடைபெறுகிறது. 

முதற்கட்ட பயிற்சி நடந்த இடங்களிலேயே 2-ம் கட்ட பயிற்சி அளிக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

வாக்குச்சாவடி அலுவலர்கள் தபால் வாக்கு சீட்டு மூலம் தங்களது ஓட்டை செலுத்த உரிய ஆவணங்களுடன் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வருகிற 16-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தேர்தல்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News