உள்ளூர் செய்திகள்
வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை திடீர் மர்ம சாவு
வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை மர்மமான முறையில் இறந்தது.
வேலூர்:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ஊனை பள்ளத்தூரை சேர்ந்தவர் சுகுமார்.இவரது மனைவி கவுரி (வயது 27). தம்பதிக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
4-வதாக கர்ப்பமான கவுரியை கடந்த 5-ந் தேதி அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக சேர்த்தனர். 6-ந்தேதி கவுரிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
9-ந்தேதி காலை கவுரியின் பெண் குழந்தை திடீரென மூச்சு பேச்சு இல்லாமல் இருந்தது.
இதுகுறித்து கவுரி அங்குள்ள டாக்டர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
டாக்டர்கள் வந்து குழந்தையை பரிசோதனை செய்து பார்த்த போது குழந்தை இறந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி உதவி பேராசிரியை கல்பனா தாலுகா போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து போலீசார் கவுரியின் பெண் குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் குழந்தை மூச்சுத் திணறல் காரணமாக இருந்ததாக தெரிய வந்தது.
இதுகுறித்து தாலுகா போலீசார் மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.