உள்ளூர் செய்திகள்
தேர்தல் வாக்கு எண்ணும் மையமான வாலாஜா அறிஞர் அண்ணா கல்லூரியில் முன்னேற்பாடு பணிகளை தேர்தல் பார்வையாளர் ஆய்வு

ராணிப்பேட்டையில் வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடுகளை தேர்தல் அதிகாரி ஆய்வு

Published On 2022-02-09 15:25 IST   |   Update On 2022-02-09 15:25:00 IST
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகளை தேர்தல் அதிகாரி ஆய்வு செய்தனர்.
வாலாஜா:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு, சோளிங்கர் மற்றும் மேல்விஷாரம் ஆகிய 5 நகராட்சிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் மையமான வாலாஜா அறிஞர் அண்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எண்ணப்படுகிறது. 

அங்கு நடைபெறும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் வளர்மதி கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

இக்கல்லூரியில் பிரதான கட்டிடம் தரைத்தளத்தில் வாலாஜா நகராட்சி மற்றும் ராணிப்பேட்டை நகராட்சியில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் அறைகளும், அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா கட்டிட தரைதளத்தில் ஆற்காடு நகராட்சியில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் அறைகளும், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டிடத்தின் தரைத்தளத்தில் மேல்விஷாரம் மற்றும் சோளிங்கர் நகராட்சியில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் அறைகளும் அமைக்கப்படுகிறது.

ஒரு அரங்கில் வாக்குப் பெட்டிகள் வைக்கும் பாதுகாப்பு அறையும், மற்றொரு அறையில் வாக்குகளை எண்ணும் அறையும் அமைக்கப்படுகிறது. இதற்கான வழித்தடங்கள் தனித்தனியாக அமைக்கப்பட உள்ளது. 

வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தனித்தனியாக செல்லவும் வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பாக கொண்டு சேர்க்கவும் பாதைகள் அமைக்கப்படும் என தேர்தல் பொது பார்வையாளர் தெரிவித்தார்.

தொடர்ந்து ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் உள்ள கட்டிடத்தில் தரைதளத்தில் தக்கோலம், பனப்பாக்கம், நெமிலி, காவேரிப்பாக்கம் பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் அறைகளும், முதல் தளத்தில் அம்மூர், விளாப்பாக்கம், திமிரி, கலவை பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் அறைகளும் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

வாக்கு எண்ணும் அறைகளுக்கு தனித்தனியாக வேட்பாளர்களும், அலுவலர் களும் சென்று வருவதற்கான பாதைகளையும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்துச் செல்வதற்கான பாதைகளும் எவ்வித இடையூறும் இல்லாமல் அமைக்கப்பட வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், போலீஸ் துணை சூப்பிரண்டு பிரபு, நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Similar News