உள்ளூர் செய்திகள்
வேலூர் பா.ம.க வேட்பாளர்கள் 25 பேர் பாதுகாப்பு கேட்டு எஸ்.பி. ஆபீசில் மனு
வேலூரில் 24-வது வார்டு பாமக வேட்பாளரை தோல்வி பயம் காரணமாக தி.மு.க.வினர் போட்டியிலிருந்து விலக வேண்டும் எனவும் இல்லையெனில் தொழில் செய்ய முடியாது என மிரட்டியது கண்டிக்கத்தக்கது.
வேலூர்:
வேலூர் ரங்காபுரம் நடைபாறையை சேர்ந்தவர் பரசுராமன். இவர் வேலூர் மாநகராட்சி 24-வது வார்டில் பா.ம.க சார்பில் போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் இரவு திமுகவினர் பரசுராமனை கடத்தி சென்று வேட்புமனுவை வாபஸ் பெற வேண்டும் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பா.ம.க மாவட்ட செயலாளர் இளவழகன், மாநில துணைத்தலைவர் என். டி.சண்முகம், மாவட்ட தலைவர் வெங்கடேசன் மற்றும் பாமக வேட்பாளர்கள் 25 பேர் வேலூர் எஸ்பி ஆபீஸில் புகார் மனு அளித்தனர்.
வேலூர் மாநகராட்சி தேர்தலில் 25 பாமக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 24-வது வார்டில் போட்டியிடும் பரசுராமனை நேரில் அழைத்து வேட்பு மனுவை வாபஸ் பெற வேண்டும் எனவும், இல்லையெனில் தொழில் செய்ய முடியாது என மிரட்டியுள்ளனர்.
நீங்கள் தேர்தலில் நிற்பதால் தி.மு.க வேட்பாளராக நிற்க வேண்டும். உங்களுக்கு 2 நாட்கள் அவகாசம் கொடுக்கிறோம். அதற்குள் நல்ல முடிவை சொல்ல வேண்டும் என மிரட்டி அனுப்பியுள்ளனர்.
அதனால் பா.ம.க வேட்பாளர்களுக்கு போலீஸ் பாதுகாப்பும், மிரட்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கூறியுள்ளனர்.
இதுகுறித்து பா.ம.க. தலைவர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
வேலூரில் 24-வது வார்டு பாமக வேட்பாளரை தோல்வி பயம் காரணமாக தி.மு.க.வினர் போட்டியிலிருந்து விலக வேண்டும் எனவும் இல்லையெனில் தொழில் செய்ய முடியாது என மிரட்டியது கண்டிக்கத்தக்கது.
மக்கள் செல்வாக்கு உள்ளவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவது தான் ஜனநாயகம் செல்வாக்கு இல்லாதவர்கள் அதை வளர்த்துக் கொள்ள வேண்டும் மாறாக மிரட்ட கூடாது பா.ம.க. வேட்பாளரை மிரட்டிய தி.மு.க.வினர் மீது மாநில தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டு உள்ளார்.
இவரது பதிவுக்கு தி.மு.க மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு எம்.எல்.ஏ.வுமான நந்தகுமார் டுவிட்டரில் மறுப்பு தெரிவித்துள்ளார்.
பா.ம.க வேட்பாளரை யாரும் மிரட்டவில்லை, கடத்தவும் இல்லை.
மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுவதால் தான் வெற்றி பெற முடியாது எனவும், தி.மு.க. சார்பில் உதய சூரியன் சின்னம் ஒதுக்க வேண்டும் வேண்டும் என எங்களை நேரில் சந்தித்து கேட்டுக்கொண்டார்.
24-வது வார்டு தி.மு.க. நிர்வாகிக்கு ஒதுக்கிய காரணத்தை அவரிடம் தெரிவித்து விட்டோம்.இதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. அவரை மிரட்ட வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை.
இந்த உண்மையை விசாரிக்காமல் என்மீது பொய்யான ஆதாரமற்ற குற்றச்சாட்டை வைத்தது ஏற்புடையது அல்ல. காரணம் பா.ம.க வேட்பாளரை மிரட்டி வெற்றி பெற வேண்டிய நிலையில் திமுக எப்போதும் இருந்ததில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.