உள்ளூர் செய்திகள்
100-க்கும் மேற்பட்ட திருமண நிகழ்ச்சிகளால் களை கட்டிய திருவண்ணாமலை
100-க்கும் மேற்பட்ட திருமண நிகழ்ச்சிகளால் திருவண்ணாமலை களை கட்டியது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் புகழ்பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளதால் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் திருவண்ணாமலையில் திருமணத்தை நடத்தி செல்ல விரும்புகின்றனர்.
திருமணத்துக்கு வருபவர்களும் ஒரே கல்லில் 2 மாங்காய் என்பது போல் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்து செல்கின்றனர்.
கடந்த 2 நாட்களாக திருவண்ணாமலையில் 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. அனைத்து திருமண மண்டபங்களிலும் நடைபெற்ற வரவேற்பு மற்றும் திருமண நிகழ்ச்சிகளில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் திருமண நிகழ்ச்சிக்கு வந்த மக்கள் கூட்டம் காரணமாக திருவண்ணாமலை நகரம் களை கட்டி காணப்பட்டது.இதையொட்டி மளிகை கடைகள், காய்கறி கடைகள், பூக்கடைகள் உள்ளிட்ட கடைகளில் விறுவிறுப்பாக வியாபாரம் நடைபெற்றது.
மேலும் ஒலி ஒளி அமைப்பாளர்கள், நாதஸ்வர கலைஞர்கள் உள்ளிட்ட கலைஞர்கள் நல்ல வருமானம் பெற்றனர்.
தற்போது நகரங்களில் திருமணம் செய்துகொள்ள மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் கிராமப் பகுதிகளில் வசிப்பவர்களும் நகரங்களை நோக்கி படையெடுக்கின்றனர். இங்கு அனைத்து வசதிகளுடன் திருமண மண்டபங்கள் கிடைப்பதால் அவர்களுக்கு நகரங்கள் மீது ஆர்வம் அதிகரித்து வருகிறது.
செலவு அதிகரித்த போதிலும் திருமணத்தில் இதெல்லாம் சகஜம் என்ற மனநிலையில் திருமணத்தை நடத்தி செல்கின்றனர்.
ஓரளவு வசதி படைத்தவர்கள் ஆடம் பரமான முறையில் திருமணத்தை நடத்து கின்றனர். அவர்கள் மாப்பிள்ளை ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.
மேலும் பல திருமணங்கள் நடைபெறுவதால் அந்தந்த பகுதியில் அமைந்துள்ள கோவில்களில் திருமண கோஷ்டியினர் சிறப்பு வழிபாடுகள் செய்கின்றனர்.