உள்ளூர் செய்திகள்
அ.தி.மு.க. பெண் வேட்பாளர்

என் கணவரை உயிருடன் மீட்டு தாருங்கள் - அ.தி.மு.க. பெண் வேட்பாளர் புகார்

Published On 2022-02-07 14:37 IST   |   Update On 2022-02-07 14:37:00 IST
ராஜபாளையத்தில் தி.மு.க. வேட்பாளர் கடத்தி சென்ற கணவரை உயிருடன் மீட்டு தாருங்கள் என அதிமுக பெண் வேட்பாளர் புகார் அளித்துள்ளார்.
ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி 29வார்டில் அ.தி.மு.க. வேட்பாளராக முதனூர் தெருவை சேர்ந்த ராதிகா (வயது36) என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரது கணவர் ராஜேந்திரன் கட்டிட தொழிலாளி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு ராதிகாவின் கணவர் ராஜேந்திரன் முக்கிய பிரமுகரை சந்தித்து விட்டு வருவதாக வீட்டில் கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் பதற்றம் அடைந்த அவரது மைவி மற்றும் கட்சியினர் ராஜேந்திரனை பல இடங்களில் தேடினர். ஆனால் பலன் இல்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதுகுறித்து ராதிகா தெற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகார் மனுவில், நான் 29-வது வார்டில் போட்டியிடுகிறேன். எனது வார்டில் தி.மு.க சார்பில் போட்டியிடும் ராதாகிருஷ்ணராஜா எனது வேட்புமனுவை திரும்ப பெற சொல்லி மிரட்டி வந்தார். இந்த நிலையில் எனது கணவரை காணவில்லை. நான் எனது வேட்புமனுவை திரும்ப பெற மறுத்துவிட்டதால் என்னை பயமுறுத்துவதற்காக எனது கணவர் ராஜேந்திரனை தி.மு.க. வேட்பாளர் ராதாகிருஷ்ணராஜாவும், அவரது கூட்டாளிகளும் கடத்தி சென்றுள்னர். எனவே எனது கணவரை உயிருடன் மீட்டு தாருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் ராஜபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

Similar News