உள்ளூர் செய்திகள்
போளூரில் தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை
போளூர் அருகே தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை செய்துகொண்டார்.
போளூர்:
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள குருவி மலை கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (வயது50) கூலித்தொழிலாளி.
குடும்ப தகராறில் சேட்டு கடந்த 1-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கலசப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சேட்டு மகன் ராஜ்குமார் (25) பட்டதாரியான இவர் தந்தை மீது அதிகப் பாசம் கொண்டவர். தந்தை திடீரென்று இறந்து விடுவார் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதனால் அவர் மனவேதனையில் இருந்ததால் எதுவும் சாப்பிடாமல் அப்படியே இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் தந்தை தற்கொலை செய்து கொண்ட அதே பாணியில் எலி மருந்து தின்று மயங்கி விழுந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.
தந்தையும் மகனும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து குருவிமலை கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கிடையே ராஜ்குமார் தற்கொலை குறித்து கலசபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.