உள்ளூர் செய்திகள்
ஆர்.எஸ்.மங்கலத்தில் மூதாட்டி அடித்துக்கொலை - கணவரிடம் விசாரணை
மூதாட்டி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆர்.எஸ்.மங்கலம்:
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் செட்டிய மடையை சேர்ந்தவர் சந்தியாகு (எ) சந்திரசேகர். ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஞானசவுந்தரி (வயது80).
இவர்களது பிள்ளைகள் வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் கணவன்-மனைவி ஆகிய இருவரும் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு சாப்பாடு வாங்குவதற்காக ஆர்.எஸ்.மங்கலம் டவுண் பகுதிக்கு சந்தியாகு சென்றுள்ளார்.
இதனால் ஞானசவுந்தரி தனியாக வீட்டில் இருந்துள்ளார். சாப்பாடு வாங்கி விட்டு சந்தியாகு வீட்டுக்கு திரும்பி வந்தபோது ஞானசவுந்தரி தலையின் பின்புறம் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததாக ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அவர் தகவல் தெரிவித்தார்.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தர வின்பேரில் திருவாடானை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜான் பிரிட்டோ, ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
ஞானசவுந்தரி தலை யின் பின்பக்கம் காயம் இருப்பதால் அவர் அடித்துக் கொலை செய்யப்பட் டிருப்பது தெரியவந்தது. அவரை கொன்றது யார்? எதற்காக கொன்றார்கள்? என்பது உடனடியாக தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.
அது கொலை நடந்த வீட்டுக்குள்ளேயே சுற்றி வந்தது. பின்பு வீட்டிலிருந்து பரம்பை ரோடு வழியாக ஆர்.எஸ்.மங்கலம் பஸ்நிலையம் வரை சென்றது. இதனால் கொலையாளி கொலை நடந்த இடத்தில் இருந்து பஸ் நிலையத்திற்கு சென்று பஸ்சில் தப்பிச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தபின் ஞானசவுந்தரியின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராமநாத புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஞானசவுந்தரியின் கண வரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்ததாக தெரிகிறது. இதையடுத்து அவரை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் விசாரணையின் போது சந்தியாகு கொடுத்த தகவலின் அடிப்படையில் ஓட்டலில் வேலைசெய்து வந்த ஒரு நபரை போலீசார் தேடிச் சென்றனர். அப்போது அவர் ஊருக்கு சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
இதனால் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.