உள்ளூர் செய்திகள்
அலங்கார ஊர்திகளை கலெக்டர் மலர்தூவி வரவேற்ற காட்சி.

குடியரசுதின அலங்கார ஊர்திகளுக்கு கரூர் மாவட்டத்தில் உற்சாக வரவேற்பு

Published On 2022-02-06 12:17 IST   |   Update On 2022-02-06 12:17:00 IST
குடியரசுதின அலங்கார ஊர்திகளுக்கு கரூர் மாவட்டத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கரூர்:

சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்ற சுதந்திரப்போராட்ட வீரர்களின் உருவங்களை தாங்கிய  அலங்கார ஊர்திகள் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து கரூர் மாவட்டத்திற்கு நேற்று வருகை தந்தன.

கரூர் மாவட்ட  எல்லையான வேலாயுதம்பாளையம் பாலத்துரை மேம்பாலம் அருகே மங்கள வாத்தியம் முழங்க, மாவட்ட கலெக்டர் த.பிரபு சங்கர் மலர்தூவி வரவேற்றார்.

முன்னதாக, அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. ஆர்.இளங்கோ அலங்கார  ஊர்திகளில் உள்ள  சுதந்திரப்போராட்ட வீரர்களின்    திருவுருவச் சிலைகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

கரூர் மாவட்டத்திற்கு வந்துள்ள 2 அலங்கார ஊர்திகளில் ஒரு ஊர்தியில், பாரதியார், வ.உ.சி.,  சுப்பிரமணியசிவா,    சேலம் விஜய ராகவாச்சாரி  உள்ளிட்ட சுதந்திரப்போராட்ட வீரர்கள்,  மற்றொன்றில்  தந்தை பெரியார், ராஜாஜி, பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர்,

காமராஜர், ரெட்டைமலை சீனிவாசன், வாஞ்சி நாதன், தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன், வ.வே.சு. ஐயர், காயிதே மில்லத், தஞ்சாவூர் ஜோசப்கொர்னேலியஸ் செல்லதுரை குமரப்பா ஆகியோரின் உருவங்கள் இடம் பெற்றுள்ளன.

அலங்கார ஊர்திகள் திருவள்ளுவர் மைதானத்தில் பொதுமக்களின் பார்வைக்காக நிறுத்தப்பட்டுள்ளது. அரசு  இசைப்பள்ளியின் சார்பில் பரதநாட்டிய கலை நிகழ்ச்சி  நடைபெற்றது. பொதுமக்கள் ஏராளமானோர் ஊர்திகளை பார்வையிட்டனர்.
 
பொது  மக்கள், பள்ளி, -கல்லூரி மாணவ, -மாணவிகள் பார்வையிட ஏதுவாக, திருவள்ளுவர் மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த அலங்கார ஊர்திகள் இன்று  காலை  8.30 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் காட்சிப்படுத்தப்படுகிறது.

Similar News