உள்ளூர் செய்திகள்
தந்தைக்கு உதவியாக சென்ற மகன் மின்சாரம் தாக்கி பலி
தந்தைக்கு உதவியாக சென்ற மகன் மின்சாரம் தாக்கி பலியான சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள நெற்குப்பை சேர்ந்தவர் பரமசிவம். இவர்அதே பகுதியில் சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வருவதோடு, மேலும் விஷேச வீடுகளுக்கு மின் அலங்காரம் செய்து வருகிறார்.
இவரது மகன் பகவத் (வயது 20). பாடாலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ. படித்து வந்த இவர், தந்தைக்கு உதவியாக வீடுகளுக்கு மின் அலகாரம் செய்து வந்தார்.
இந்நிலையில் இவர்கள் வீட்டின் அருகே புதியதாக கட்டப்பட்ட ஒரு வீட்டில் இன்று புதுமனைபுகு விழா நடைபெற்றது. அந்த வீட்டில் மின் அலங்காரம் மற்றும் ரேடியோ சவுண்டுக்கு பரமசிவம் ஏற்பாடு செய்திருந்தார். இன்று காலை விழா நடந்து போது ஸ்பிக்கரில் சவுண்ட் சரியாக வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனை சரி செய்ய பகவத் சென்றார். அப்போது அவர் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பகவத் இறந்து விட்டதாக கூறினார்கள்.
இது குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தந்தைக்கு உதவி செய்ய போய் மகன் உயிரை விட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.