உள்ளூர் செய்திகள்
தேர்தலை புறக்கணிக்க போவதாக காங்கேயம் நகராட்சி பொதுமக்கள் அறிவிப்பு
திருநீலகண்டன் வீதி, சாயப்பட்டறை வீதி, புது விநாயகர் கோவில் வீதி ஆகியவற்றில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்.
காங்கேயம்:
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சி 5-வது வார்டுக்குட்பட்ட திருநீலகண்டன் வீதி, சாயப்பட்டறை வீதி, புது விநாயகர் கோவில் வீதி ஆகியவற்றில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு சாக்கடை வசதி மற்றும் முறையான சாலை வசதிகள் இல்லாத காரணத்தால் ஆங்காங்கே கழிவு நீர் தேங்கி சுகாதார கேட்டை ஏற்படுத்தி வருவதாகவும், இந்த பிரச்சினைகளை சரி செய்ய கோரி மாவட்ட கலெக்டர், தாசில்தார், நகராட்சி ஆணையாளர் என அனைத்து அரசு அதிகாரிகளிடமும் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
எனவே இதனை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் எதிர்வரும் நகராட்சி தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்து டிஜிட்டல் பேனர் வைத்துள்ளனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.