உள்ளூர் செய்திகள்
கண்டெய்னர் லாரியை கடத்திய வாலிபர் கைது
கவேரிப்பாக்கம் அருகே கண்டெய்னர் லாரியை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த உத்திரம்பட்டு கிராமம் ஏசுநாதர் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 29) இவர் பெங்களூரில் உள்ள தனியார் லாரி கம்பெனியில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
சென்னையில் உள்ள கம்பெனியில் லோடு ஏற்ற கண்டெய்னர் லாரியில் சென்றார்.
அப்போது லாரியை ஓச்சேரியில் ரோட்டின் ஓரமாக நிறுத்திவிட்டு தனது சொந்த ஊரான உத்திரம்பட்டில் உள்ள தனது வீட்டுக்கு குளிக்கச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது லாரியை காணவில்லை.
அதிர்ச்சியடைந்த அவர் ரோட்டின் 2 பக்கமும் தேடி பார்த்துள்ளார்.இதுகுறித்து அவளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப் இன்ஸ்பெக்டர் சேகர், சீனிவாசன் உள்ளிட்ட போலீசார் உடனடியாக அனைத்து சோதனை சாவடிகளுக்கும் தகவல் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் போலீசார் கொடுத்த தகவலின் அடிப்படையில் சுங்குவார் சத்திரம் அருகே லாரி நின்றிருப்பதாக தகவல் வந்தது. விரைந்து சென்ற போலீசார் லாரியை மீட்டனர்.
அங்கு லாரியை கடத்தி சென்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் கடலூர் மாவட்டம் வடலூர் அடுத்த காட்டுக்கொள்ளை கிராமத்தை சேர்ந்த செல்வம் (27) என தெரியவந்தது.
அவர்மீது பல்வேறு வழக்குகள் ஏற்கனவே உள்ளது. அவரை போலீசார் கைது செய்து விசரணை நடத்தி வருகின்றனர்.