உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

ஈரோடு மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை கொள்முதல்

Published On 2022-02-04 13:46 IST   |   Update On 2022-02-04 13:46:00 IST
ஈரோடு மாவட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படும் என்று கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு:

ஈரோடு மாவட்ட  ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படும் என்று கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் விவசாயிகள் விளைவித்த விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும் வகையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலமாக விளை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

ஈரோடு மாவட்டத்தில்  2022-ம் மத்திய அரசின் ஆதாரவிலைத் திட்டத்தின் கீழ் ஈரோடு விற்பனை குழுவில் செயல்படும் சத்தியமங்கலம், அவல் பூந்துறை, எழுமாத்தூர் மற்றும் கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கொப்பரை கொள்முதல்¢ ஜூன் மாதம் 2022 வரை செய்யப்பட உள்ளது.

இத்திட்டத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படவுள்ள கொப்பரையானது அரசு நிர்ணயிக்கப்பட்டுள்ள தரத்தில் இருக்க வேண்டும். மேலும் ஒரு கிலோ பந்துக்கொப்பரை ரூ.110 மற்றும் அரவைக் கொப்பரை ரூ.105.90 வீதம் கொள்முதல் செய்யப்படவுள்ளது. 

கொள்முதல் செய்யப்பட்ட கொப்பரைக்கான தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

எனவே இத்திட்டத்தில் பங்கு பெறவிரும்பும் விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை, வங்கிக்கணக்கு புத்தகத்தின் முகப்பு, சிட்டா, அடங்கல் ஆகியவற்றின் நகல்களுடன் சத்தியமங்கலம், அவல் பூந்துறை, எழுமாத்தூர் மற்றும் கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

இக்கொள்முதல் திட்டத் தில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தென்னை சாகுபடி செய்துள்ள வேளாண் பெருங்குடி மக்கள் பங்கு பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News