உள்ளூர் செய்திகள்
மோதி நின்ற லாரிகள்.

பஞ்சராகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதி கிளீனர் பலி

Published On 2022-02-04 13:22 IST   |   Update On 2022-02-04 13:22:00 IST
சத்தியமங்கலம் அருகே இன்று காலை பஞ்சராகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதியது. இந்த விபத்தில் கிளீனர் பலியானார்.
சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் அருகே இன்று காலை பஞ்சராகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதியது. இந்த விபத்தில் கிளீனர் பலியானார்.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து கல் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி கோவை நோக்கி புறப்பட்டது. 

இன்று காலை அந்த லாரி சத்தியமங்கலம்-பண்ணாரி சாலையில் வந்து கொண்டு இருந்த போது திடீரென பஞ்சரானது.  இதையடுத்து லாரியை டிரைவர் ரோட்டோரமாக நிறுத்தினார்.

இதேபோல் கர்நாடக மாநிலம் நஞ்சன்கோடு என்ற பகுதியில் இருந்து குளிர்பானம் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி கேரள மாநிலம் பாலக்காடு நோக்கி சென்று கொண்டு இருந்தது. 

இந்த லாரி சத்தியமங்கலம்-பண்ணாரி சாலையில் வந்து கொண்டு இருந்த போது திடீரென ரோட்டோரம் பஞ்சராகி நின்று இருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. 

இதில் குளிர்பான லாரியின் இடது பக்கம் பஞ்சராகி நின்ற லாரிக்குள் சொருகி கொண்டது. 

இந்த விபத்தில் குளிர்பானம் ஏற்றி வந்த லாரியின் இடதுபுறம் அமர்ந்து இருந்த சத்தியமங்கலத்தைச் சேர்ந்த கிளீனர் சிவக்குமார் (50) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

இந்த சம்பவம் பற்றி தெரிய வந்ததும் சத்தியமங்கலம் போலீசார் விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கி இருந்த சிவக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தின் காரணமாக சத்திய மங்கலம்-பண்ணாரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News