உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

புதுவையிலிருந்து கடலூருக்கு வேனில் கடத்திய 2,200 போலி மது பாட்டில்கள் பறிமுதல்

Published On 2022-02-02 15:46 IST   |   Update On 2022-02-02 15:46:00 IST
புதுவையிலிருந்து கடலூருக்கு வேனில் கடத்திய 2,200 போலி மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர்:

கடலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் பத்மா மற்றும் போலீசார் கடலூர் அருகே திருவந்திபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது பொருட்கள் ஏற்றிச் செல்லும் வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். இதில் அட்டைப்பெட்டிகள் அதிக அளவில் இருந்தன. அப்போது சந்தேகம் அடைந்த போலீசார் அட்டைப் பெட்டியைத் திறந்து பார்த்தபோது மது பாட்டில்கள் இருந்தன.

இதனை தொடர்ந்து மது பாட்டில்கள் மற்றும் ஒரு வாலிபரை பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். இதில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா குமளன்குண்டு சேர்ந்தவர் சரவணன் (வயது 35) என தெரியவந்தது. மேலும் பறிமுதல் செய்த மதுபாட்டில்களை பார்த்தபோது போலீசாருக்கு மேலும் சந்தேகம் எழுந்தது. பின்னர் சரவணனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், கடத்தி செல்லப்பட்ட அனைத்து மதுபாட்டில்களும் போலி மதுபாட்டில்கள் என தெரிய வந்தது. மேலும் 46 பெட்டிகளில் 2200 மது பாட்டில்கள் இருந்தது. இதன் மதிப்பு 3 லட்சம் ஆகும்.

மேலும் புதுச்சேரி மாநிலத்தில் போலியாக மதுபானம் எங்கு தயாரிக்கிறார்கள்? இதுபோன்ற கடத்தல் எங்கிருந்து நடைபெறுகிறது? உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News