உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

இறைச்சி கழிவுகளால்- கால்நடைகளை கடித்து குதறும் வெறிநாய்கள்

Published On 2022-02-01 06:02 GMT   |   Update On 2022-02-01 06:02 GMT
நகரப்பகுதிகளில் இறைச்சிக்கழிவுகளை அப்புறப்படுத்த, பல்வேறு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
உடுமலை:

உடுமலை, குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில் 70-க்கும் அதிகமான கிராமங்கள் உள்ளன. 

இங்கு நூற்றுக்கணக்கான இறைச்சிக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவதில்லை. அனைத்து வகை கழிவுகளையும் கிராமத்திலுள்ள திறந்தவெளியில், சாலையோரத்தில் வீசுகின்றனர். சில கிராமங்களில், குளம், குட்டை உட்பட நீராதாரங்களில்  கழிவுகளை வீசுவதால், சுகாதார சீர்கேடு நிரந்தரமாகியுள்ளது. 

நகரப்பகுதிகளில் இறைச்சிக்கழிவுகளை அப்புறப்படுத்த, பல்வேறு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. ஆனால் ஊராட்சிகளில் எந்த விதிமுறைகளையும் கண்டுகொள்வதில்லை. ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. 

இத்திட்டத்தில் வீடுதோறும், பணியாளர்கள், மட்கும், மட்காத குப்பையை பெற்று தரம் பிரிக்கின்றனர். ஆனால் இத்திட்டத்திலும், இறைச்சிக்கழிவுகளை அகற்றுவதில்லை.கிராமங்களில் திறந்தவெளியில், இறைச்சிக்கழிவு கொட்டும் இடத்தில் தெருநாய்கள் அப்பகுதியை முற்றுகையிடுகின்றன. 

இந்த இறைச்சியை உண்ணும் நாய்கள், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை துரத்துவதால், விபத்துகள் ஏற்படுகிறது. 

மேலும் கழிவுகள் கொட்டாத போது  நாய்கள் இரைக்காக, அருகிலுள்ள கால்நடைகளை தாக்குகின்றன. எரிசனம்பட்டி பகுதியில் 10-க்கும் மேற்பட்ட நாய்கள் சேர்ந்து ஒரு கன்றுக்குட்டியை, தாக்கி கொன்றுள்ளன. 

இதனால் கால்நடை வளர்ப்போர் அச்சத்தில் உள்ளனர். கழிவுகள் கொட்டும் பிரச்சினையை ஒன்றிய, ஊராட்சி நிர்வாகங்கள் கண்டுகொள்ளாத நிலையில், பல்வேறு விபரீதங்கள் ஏற்பட்டு வருகிறது. 

எனவே திருப்பூர் மாவட்ட நிர்வாகம் கிராமங்களில், இறைச்சிக்கழிவுகள் அப்புறப்படுத்துவதற்கான விதிமுறைகளை முறையாக அமல்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Tags:    

Similar News